Thursday, November 23, 2006

`சிவாஜி' படத்தில் `மெகா' கரகாட்டம்

இயக்குனர் சங்கர் என்றாலே பிரமாண்டத்துக்கு குறைவு இருக்காது. ரஜினியின் "சிவாஜி'' படத்துக்காக அவர் இதுவரை இல்லாத அளவுக்கு காட்சிக்கு காட்சி இரட்டிப்பு மடங்கு பிரமாண்டத்தை கொண்டு வந்துள்ளார்

குறிப்பாக ரஜினி ஆடும் பாடல் காட்சிகள் பிரமாண்டத்தின், பிரமிப்பின் உச்சியைத் தொடும் அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதிலும் ஒரு கிராமிய மணம் கமழும் பாடல் உலகத் தமிழர்கள் அனைவரிடமும் பரபரப்பாக பேசப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் சதாரா பகுதியில் வாய் எனும் மலை பிரதேசத்திலும், பஞ்ச தனி அணைக் கட்டிலும் இந்த பாடல் காட்சி 8 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா, மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் பங் கேற்றனர்.

இந்த பிரமாண்டத்துக்காக சங்கர் எடுத்த முயற்சிகள் ஏராளம். தமிழகத்தில் இருந்து முதலில் அவர் எதிர்பார்த்தது போல நாட்டுப்புறக் கலைஞர்கள் கிடைக்கவில்லை. கடைசியில் புஷ்பவனம் குப்புசாமி மூலம் முகப்பேரில் கலைக்கோட்டம் நடத்தி வரும் எம். அன்பரசனை அணுகினார். அன்பரசன் 2 நாள்அவகாசத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு சென்று 64 நாட்டுப்புறக்கலைஞர்களை தேர்வு செய்து ஒருங் கிணைத் தார்.

அதன் பயனாக 64 கலை ஞர்களும் சிவாஜி படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஆடும் அரிய வாய்ப்பை பெற்றனர். ரஜினியுடன் இவர்கள் மயி லாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை என்று விதம் விதமாக கிராமிய நடனங்களை ஆடி தூள்கிளப்பி இருக்கிறார்கள். ரஜினியும் இந்த பாட்டில் பட்டையை கிளப்பி உள்ளாராம்.

இந்த பாடல் "சூட்டிங்'' நடந்த 8 நாட்களும் 64 கலைஞர்களும் ரஜினியின் பாசத்தையும் துளி கூட பந்தா இல்லாத பண்பையும் கண்டு, அனுபவித்து நெகிழ்ந்து போய் விட்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி இவ்வளவு இறங்கி வந்து அன்பாக பழகுபவரா என்று 64 கலைஞர்களும் மெய்சிலிர்த்து விட்டனர். 64 பேரிடமும் தனித்தனியாக குடும்ப சூழ்நிலையை விசாரித்து அவர் தன் உணர்வையும் பகிர்ந்து கொண்டதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது என்கிறார்கள்.

இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல பாடல் காட்சி படமாக்கி முடித்ததும் தமிழ் நாட்டுக்கு புறப்பட்ட 64 கலைஞர்கள் கையிலும் ரஜினி ஒரு கவரை திணித்தார். ஒவ்வொரு கலைஞனுக்கும் அதில் ரஜினி தன் சொந்த பணத்தில் இருந்து தலா ரூ.5 ஆயிரம் வைத்திருந்தார். அதைப் பார்த்ததும் ரஜினியின் இரக்க குணத்தை நினைத்து 64 கலைஞர்களும் நெகிழ்ந்து விட்டனர். அவர்களுக்கு ரஜினி மீது இருந்த மதிப்பும் மரியாதையும் இரட்டிப்பாக உயர்ந்தது.

உணர்ச்சிப் பெருக்கில் இருந்த அவர்களை ரஜினி அத்துடன் விடவில்லை. 64 கலைஞர்களுடனும் தனித் தனியாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோக்கள் 64 பேருக்கும் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார்.

அதனால் தானோ என்னவோ இந்த 64 கலை ஞர்களும் ரஜினியுடன் பழகிய 8 நாள் அனுபவத்தை 8 ஜென்மத்துக்கு சமமானது போல கருதுகிறார்கள்.

இந்த 64 கலைஞர்களையும் ரஜினியுடன் ஆட வைத்த கலைக்கோட்டம் நிறுவனர் அன்பரசனும் ரஜினியின் பாசமழையில் நனைந்து விட்டு வந்துள்ளார். கலைமாமணி பட்டம் பெற்ற இவர் குடி யரசு தினவிழாவில் 300 கலைஞர்களை புதுமையான முறையில் ஆட வைத்து பாராட்டு பெற்றவர். இவர் கைவண்ணத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் முத்திரை பதித்துள்ளன. ஆனாலும் ரஜினியுடன் பழகிய 8 நாட்களும் மறக்க முடியாதவை என்கிறார்.

இது பற்றி அவர் கூறுகையில், "ரஜினி மனித நேயம் மிக்க நடிகர். ஒவ்வொருவருடனும் அவர் எளிமையாக நெருங்கி பழகினார். சூப்பர் ஸ்டார் என்ற பந்தா இல்லவே இல்லை. என்னைப் பார்க்கும் போதெல்லாம் புன்னகைப் பார். நான் அடையார் இசைக்கல்லூரியில் பேரா சிரியராக பணிபுரிகிறேன் என்றதும் சரிக்கு சமமாக உட்கார வைத்தே பேசினார். மற்றவர்கள் மனதுக்கு நன்கு மரியாதை கொடுக்கிறார். நான் அழைத்துச் சென்ற 64 பேருக்கும் 3 லட்சம் ரூபாயை அவர் கொடுத்து விட்டு, கலைஞர்கள் முகத் தில் மகிழ்ச்சியை கண்டதும், அவரும் சிரித்தார். அப் பப்பா... இவ்வளவு ஈகை குணம் உள்ளவரா என்று சிலிர்த்து போனேன். அவர் காட்டிய அன்பு கள்ளங் கபடலம் இல்லாதது. நினைத்து, நினைத்துப் பார்த்து மகிழக்கூடியது'' என்றார்.

இயக்குனர் சங்கரை, "மக்கள் ரசனையை நன்கு புரிந்தவர்'' என்றார். புறப்படும் போது "சஸ்பென்ஸ்'' வைத்தப்படி அன்பரசன் மேலும் ஒரு தகவல் சொன்னார். "எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ரஜினி கிராமிய கலைஞர்களுடன் ஆடிய பாடல் 2007-ல் சூப்பர் ஹிட் பாட்டாக இருக்கும். பட்டி தொட்டி எல்லாம் இது தான் ஒலிக்கும். அது ஒரு மனம் கவரும் பாடல்'' என்றார்.

அவர் சொல்ல, சொல்ல ரஜினியின் கிராமிய இசை, நடன பாட்டை எப்போது கேட்போம் என்ற ஆவல் அதிகமாகி விட்டது... கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். விரைவில் "சிவாஜி'' பாடல் கேசட் வரப்போகிறது.

No comments:

Blog Archive